எந்தவொரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை விரதம் இருந்து வழிபாடு முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும் என்பது காலம்காலமாக பின்பற்றப்படும் நடைமுறை. வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதில் குலதெய்வத்திற்கு நிகர் எதுவுமில்லை. ஒரு சில இடங்களில் குலதெய்வத்தை ஒருமுறை மட்டும் தான் கும்பிடுவார்கள்.
அப்படித்தான் வழிபட வேண்டும் என்ற நியதியை முன்னோர்களின் வழி முறையை பின்பற்றி தொடருகிறார்கள். குலதெய்வத்தை ஒருமுறை மட்டும்தான் கும்பிட வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் தாராளமாக கும்பிடலாம். ஏதாவதொரு பிரச்சினையில் சிக்கி மீள முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்களிடம் ‘ஒருமுறை குல தெய்வத்தை வழிபட்டு வாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்’ என்று சொல்வார்கள். வெளியூரில் இருந்தால் மாதம் ஒரு முறை சென்று வழிபட்டு வரலாம். அவ்வாறு சென்று வரமுடியவில்லை என்றால் குறிப்பிட்ட தொகையை கோவிலுக்கு அனுப்பி பிரசாதத்தை அனுப்ப சொல்லலாம். உங்களுடைய நட்சத்திரம் வரும் நாட்களில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். அவ்வாறு இல்லை என்றால் பவுர்ணமி அல்லது அமாவாசை அன்று வழிபடலாம்.
மற்ற தெய்வத்தை பொருத்தவரை அர்ச்சனை செய்து சாமி கும்பிடுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து சாமி கும்பிடவேண்டும். எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்ல வேண்டும். உங்களுக்கு எந்த தோஷம் இருந்தாலும் விரதம் இருந்து குலதெய்வ வழிபாட்டை தொடருங்கள். அது அனைத்து தோஷத்தையும் போக்க கூடியது. முதலில் குலதெய்வ வழிபாட்டைதான் மேற்கொள்ள வேண்டும். பரிகாரங்கள் எல்லாம் அதற்கு பிறகுதான் என்பதை மனதில் வையுங்கள்.