நெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா முன்னிட்டு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி, மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.

இரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை, நடன தீபாராதனை ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துக்கு பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு தாமிரசபையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் பெரியசபாபதி சன்னதி முன்பு தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது. 4-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வருதல் நடக்கிறது.

9-ம் திருவிழாவான 22-ந்தேதி இரவு முழுவதும் தாமிரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 23-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு தாமிரசபை முன்பு உள்ள கூத்தபிரான் சன்னதி முன்பு பசு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com