ஏழு தீர்த்தங்கள்: திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை, குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி என்பவையாகும்.
ஏழு பெயர்கள்: பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டாலும் திருமலைவாசனுக்கு ஏழு முக்கிய பெயர்கள் இருக்கின்றன. அவை : ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி ஆகியனவாகும்.
ஏழு தலை ஆதிசேஷன்: ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். பிரம்மோத்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் `பெத்தசேஷ வாகனம்’ என்ற ஏழுதலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.
ஏழு இடங்கள்: கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சாமி சன்னதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.
ஏழு கலச ராஜகோபுரம்: திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு ஏழு உலகங்களுடனும் தொடர்பு கொள்வதுபோல ஏழு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழு மகிமைகள்: திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை, சீனிவாச மகிமை, தல மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.