கோயிலின் பெயரை அந்தந்த சுவாமியின் பெயரால் மீனாட்சி அம்மன் கோயில், கபாலீஸ்வரர் கோயில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், விருத்தகிரீஸ்வரர் கோயில் என குறிப்பிடுவார்கள். ஆனால், “பெரிய கோயில்’ என்ற அடைமொழியைப் பெற்றது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.
இங்கு தல விநாயகர் கன்னி விநாயகர் ஆவார். மூலவர் பிரகதீஸ்வரரை, ராஜராஜ சோழன் தன் காலத்தில் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற திருநாமத்தில் வணங்கியுள்ளான். உலகிலேயே இங்கு தான் சண்டிகேஸ்வரருக்கு மிகப்பெரிய தனி சன்னதி உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக விளங்குவதால், நவக்கிரகங்களுக்கு பதில் நவ லிங்கங்கள் உள்ளன.
தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கங்களுக்கே செய் யப்படுகிறது. கோபுரம் பிரமிடு அமைப் பில் இருப்பதாலும், ராஜராஜன் ஆத்மார்த்தமாக கட்டிய கோயில் என்பதாலும், வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் சந்திரகாந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் உஷ்ணமாக இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
மிகப்பெரிய லிங்கம் இருந்தாலும் இங்கு பீடம் இல்லை. முதலில் உள்ள மராட்டிய நுழைவு வாயில் கோபுரம் 1803ல் கட்டப்பட்டது. இதை அடுத்துள்ள கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில், 5 நிலை 7 கலசங்கள் உள்ளன.
மூன்றாவது உள்ள ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரத்தில் 3 நிலை, 5 கலசங்கள் உள்ளன. இது கி.பி. 988ல் கட்டப்பட்டது. கருவூர் சித்தர் சன்னதி பின்புறம் உள்ள மரத்தில் மரப் பல்லியை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ராஜராஜ சோழன்- வானவன் மாதேவியின் மகன் ராஜேந்திர சோழன். இவன் தன் தந்தை கட்டிய பெரிய கோயிலைப் போலவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலை கட்டியுள்ளான். ராஜராஜனும் மற்றவர்களும் இக்கோயிலுக்கு 183 கிலோ தங்க பாத்திரங்கள், 22 கிலோ தங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளி பாத்திரங்கள், பூஜைப்பொருள் மற்றும் நைவேத்தியத்திற்காக 40 கிராமங்கள், 10 ஆயிரம் பசுக்கள் தந்துள்ளனர்.
16.5 அடி உயரமும், 7.5 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய துவார பாலகர்கள் இங்குள்ளனர். இக்கோயிலின் கோபுர கலசம் 340 கிலோ எடையுள்ள செம்புத்தகடால் ஆனது. இதற்கு 12.5 கிலோ தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலை கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் டன் எடையுள்ள கற்கள் தேவைப்பட்டது.
இவை திருச்சி அருகே உள்ள மம்மலையில் இருந்து எடுத்து வரப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.
|