பொதுவாக சிலர் எந்த கடவுளை வணங்கினாலும் ஏதும் கிடைப்பதில்லை என்று புலம்புவதுண்டு. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஜாதக தோஷமே. நமது ஜாதகமானது நவகிரகங்களை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரனின் அருள் பெறுவதன் மூலம் நமக்கு சுபயோக வாழ்க்கை கிடைக்கும். சுக்கிரனின் அருள்பெற உதவும் அற்புத காயத்ரி மந்திரம் .
சுக்கிரன் காயத்ரி மந்திரம்:
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்
இந்த மந்திரத்தை தினம்தோறும் கூறுவதன் பயனாக சுக்கிரனால் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு தீபமேற்றி இம்மந்திரத்தை துதித்து வழிபடுவதால் நிச்சயமான பலன்கள் உண்டாகும்.
சுக்கிரன் பரிகாரங்கள்:
சுக்கிர பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சுக்கிரபகவான் தலமான கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலுக்கு ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் காலை 6 முதல் 7 மணிக்குள்ளாக சென்று, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் சுக்கிர பகவான் சன்னிதியில் சுக்கிர பகவானுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து, இளம்பச்சை அல்லது வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சுக்கிரனின் முழுமையான அருளைப் பெற்றுத் தரும்.
மேற்சொன்ன பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் நவக்கிரக சந்நிதியில் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 லிருந்து 7 மணிக்குள்ளாக சென்று சுக்கிர பகவானுக்கு மல்லிகை பூக்கள் சமர்ப்பித்து, பச்சை நிற இனிப்புகள் அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, நெய் தீபம் ஏற்றி சுக்கிர காயத்ரி மந்திரத்தை 108 முறை வரை துதித்து வழிபட்டு வருவதால், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளங்கள் பெருகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரம் முதல் அதிகபட்சம் 27 வாரம் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும்.
இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு விரதம் இருந்து, சுக்கிரனையும் மகாலட்சுமியையும் வழிபடுவது ஆற்றல் வாய்ந்த பரிகாரமாக இருக்கிறது. ஏழை பெண்களின் திருமணத்திற்கு புடவை தானம், மாங்கல்ய தானம் போன்றவற்றை தருவது சுக்கிர பகவானின் அருட்கடாட்சத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். உங்களால் முடிந்த போது இளம் பச்சை நிறம் மற்றும் வெள்ளை நிற ஆடைகளை வசதி குறைந்தவர்களுக்கு தானம் வழங்குவது சிறந்தது. வலது கை மோதிர விரலில் வைரக்கல் பதிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்வது உங்களுக்கு சுக்கிரனால் யோகங்கள் உண்டாகச் செய்யும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.